14 May 2022
கோயம்பேடு மார்கெட்டுக்கு ஆந்திரா மற்றும் கர்நாடகா மாநிலங்களில் இருந்து தினசரி தக்காளி விற்பனைக்கு வருகிறது. கடந்த ஏப்ரல் மாத தொடக்கத்தில் மொத்த விற்பனை கடைகளில் ஒரு கிலோ தக்காளி ரூ.8-க்கும், சில்லரை கடைகளில் ரூ.10-க்கும் விற்கப்பட்டது.
தென் மாவட்டங்களில் பெய்த திடீர் மழை காரணமாக அந்த பகுதிகளில் நடைபெற்று வந்த தக்காளி உற்பத்தி பாதிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து, அங்குள்ள வியாபாரிகளும் ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களில் தக்காளியை கொள்முதல் செய்ய வந்ததால் கோயம்பேடு சந்தைக்கு வரும் தக்காளி வரத்து குறைய தொடங்கியது. இதனால், தக்காளி விலை அதிகரித்து வருகிறது.
இதன்படி, கடந்த ஏப்ரல் இறுதியில் கோயம்பேட்டில் தக்காளி விலை கிலோ ரூ.50க்கு விற்பனையானது. அதிகரித்து வரும் தக்காளி விலையால் ஓட்டல் உரிமையாளர்கள் மற்றும் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்து உள்ளனர்.
இந்த நிலையில் கடந்த சில நாட்களாக, மழையால் கோயம்பேடு மார்க்கெட்டுக்கு தக்காளி வரத்து குறைந்தது. இதனையடுத்து, சென்னை கோயம்பேட்டில் மொத்த விற்பனையில் ஒரு கிலோ தக்காளி விலை ரூ.70 ஆக அதிகரித்து உள்ளது. தக்காளி சில்லரை விற்பனை விலை ரூ.80 ஆக உயர்ந்து உள்ளது.
இதேபோன்று, திருச்சி காந்தி மார்க்கெட்டில் சில்லரை விற்பனையில் ஒரு கிலோ தக்காளி விலை ரூ.70க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால், இல்லத்தரசிகள், ஓட்டல் உரிமையாளர்கள் உள்ளிட்டோர் கடும் அதிர்ச்சி அடைந்து உள்ளனர்.