24 Jan 2023
ஏறாவூர் பிரதேசத்திலுள்ள பாழடைந்த காணியில் இருந்து சிசுவொன்று சடலமாக மீட்கப்பட்டுள்ளதுடன், பிரசவித்த 15 வயதான சிறுமியும், சிறுமியை கர்ப்பமாக்கிய டெங்கு ஒழிப்பு பிரிவில் கடமையாற்றும் 29 வயதான உத்தியோகத்தரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஏறாவூர் சுகாதாரதுறையில் டெங்கு நுளம்பு ஒழிப்பு பிரிவில் கடமையாற்றிவரும் இளைஞன் அந்தப் பகுதியிலுள்ள வீடுகளை சோதனை செய்யும் நடவடிக்கைக்காக சென்ற போது, புதிய காட்டுப்பள்ளி வீதியிலுள்ள வீட்டை சோதனைக்கு உட்படுத்தியுள்ளார்.
அப்போது, 15 வயதான சிறுமியுடன் தொடர்பை ஏற்படுத்தி, அச்சிறுமியை கர்ப்பமாக்கியுள்ளார். கர்ப்பமடைந்த சிறுமி, பாடசாலைக்குச் செல்வதை நிறுத்திவிட்டார். இந்நிலையில், இன்று (24) காலை 9 மணியளவில் சிசுவை பிரசவித்துள்ளார்.
தனது வீட்டில் வைத்தே சிசுவை பிரசவித்த அச்சிறுமி, வீட்டுக்கு அருகிலுள்ள பாழடைந்த காணியில் அச்சிசுவை வீசியுள்ளார் என பொலிஸாரின் ஆரம்ப க்கட்ட விசாரணையில் இருந்து தெரியவந்துள்ளது.
இதனையடுத்தே உத்தியோகத்தரும் சிறுமியும் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட சிறுமி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சடலமாக மீட்கப்பட்ட சிசு, பிரேத பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது எனத் தெரிவித்த ஏறாவூர் பொலிஸார், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.