25 Jan 2023
தமிழகம் முழுவதும் உள்ள முட்டை விற்பனை நிலையங்கள் மற்றும் முட்டை சார்ந்த உணவு தயாரிப்பு கூடங்கள் ஆகியவற்றில் வருகிற 30-ந்தேதி வரை ஒரு வார காலம் முட்டை மற்றும் முட்டையால் தயாரிக்கப்படும் உணவுப்பொருட்களின் தரத்தை உணவு பாதுகாப்பு சட்டத்தின்படி ஆய்வு செய்ய உணவு பாதுகாப்புத்துறை ஆணையாளர் உத்தரவிட்டார். இதையடுத்து உணவு பாதுகாப்பு அலுவலர் சங்கரலிங்கம், பாளையங்கோட்டை மார்க்கெட் பகுதியில் உள்ள முட்டை விற்பனை நிலையங்களில் விற்பனை செய்யப்படும் முட்டையின் தரத்தை திடீர் ஆய்வு செய்தார். அப்போது, கடை உரிமையாளர்களுக்கும், பொதுமக்களுக்கும் முட்டையின் தரத்தை தண்ணீரில் போட்டு எப்படி பார்ப்பது, முட்டையில் டார்ச்லைட் வெளிச்சம் பாய்ச்சி அதன் தரத்தை எப்படி கண்டுபிடிப்பது என்று செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டது. நெல்லை, தென்காசி மாவட்டம் முழுவதும் ஒருவார காலம் அந்தந்த பகுதி உணவு பாதுகாப்பு அலுவலர்கள் முட்டை மற்றும் முட்டையால் தயாரிக்கப்படும் உணவுப்பொருட்களின் தரத்தை ஆய்வு செய்வார்கள் என்று மாவட்ட நியமன அலுவலர் சசிதீபா தெரிவித்தார்.