26 May 2023
மலேசியா மாஸ்டர்ஸ் சர்வதேச பேட்மிண்டன் போட்டி கோலாலம்பூரில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த ஆண்கள் ஒற்றையர் பிரிவின் 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் உலக தரவரிசையில் 9-வது இடத்தில் இருக்கும் இந்திய வீரர் எச்.எஸ்.பிரனாய் சரிவில் இருந்து மீண்டு வந்து 13-21, 21-16, 21-11 என்ற செட் கணக்கில் ஆல் இங்கிலாந்து சாம்பியனான ஷி பெங் லியை (சீனா) வீழ்த்தி கால்இறுதிக்கு முன்னேறினார். இந்த ஆட்டம் 1 மணி 10 நிமிடம் நீடித்தது.
மற்றொரு ஆட்டத்தில் இந்திய வீரர் ஸ்ரீகாந்த் 21-19, 21-19 என்ற நேர்செட்டில் குன்லாவுத் விதித்சரனை (தாய்லாந்து) தோற்கடித்து கால்இறுதிக்குள் நுழைந்தார். அதே சமயம் இந்திய இளம் வீரர் லக்ஷயா சென் 14-21, 19-21 என்ற நேர்செட்டில் ஹாங்காங்கின் அங்குஸ் நா கா லாங்காவிடம் வீழ்ந்தார்.
பெண்கள் ஒற்றையர் பிரிவின் 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் ஒலிம்பிக்கில் 2 முறை பதக்கம் வென்றவரான இந்திய வீராங்கனை பி.வி.சிந்து 21-16, 21-11 என்ற நேர்செட்டில் அயா ஒஹோரியை (ஜப்பான்) சாய்த்து கால்இறுதியை எட்டினார். சிந்து அடுத்து தரவரிசையில் 18-வது இடத்தில் உள்ள சீனாவின் ஜாங் யி மேனை சந்திக்கிறார்.