18 Mar 2023
ரணில் அரசாங்கத்திற்கு எதிராக தீப்பந்த போராட்டம் ஒன்று யாழ்ப்பாணம் புத்தூரில் இடம்பெற்றது.
தற்போதைய அரசாங்கம் பொருட்களின் விலைகளை அதிகரித்து சர்வாதிகார ஆட்சியை முன்னெடுத்து வருவதாக தெரிவித்து, தீப்பந்தங்களை தாங்கியவாறு வலி.கிழக்கு பிரதேச சபைக்கு முன்பாக இந்தப் போராட்டம் நேற்று (17) இரவு முன்னெடுக்கப்பட்டது
மின்சாரக் கட்டண உயர்வை கைவிடு- உணவு எரிபொருள் விலையை குறை- உழைக்கும் மக்களை பட்டினிக்குத் தள்ளாதே- அடக்குமுறைகளை ஏவி மக்களை ஒடுக்காதே- உள்ளிட்ட பல்வேறு கோஷங்களை எழுப்பியும் பதாகைகளைத் தாங்கியவாறும் இந்த தீப்பந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இதன் போது புதிய ஜனநாயக மார்க்சிச லெனினிசக் கட்சியின் பொதுச் செயலாளர் சி.க செந்திவேல், வலி.கிழக்கு பிரதேச சபைத் தவிசாளர் தியாகராஜா நிரோஷ், பிரதேச சபை உறுப்பினர் செல்வம் கதிர்காமநாதன் உள்ளிட்டவர்களுடன் நூற்றுக்கும் மேற்பட்ட மக்களும் கலந்து கொண்டனர்.