18 Sep 2023
தியாகி திலீபனின் திருவுருவத்தை சுமந்து சென்ற ஊர்தி மீது காடையர்களால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. திருகோணமலை நோக்கி பயணித்த திலீபனின் நினைவு ஊர்தியின் மீது திருகோணமலை சர்தாபுர பகுதியில் வைத்து சிலரால் தாக்கப்பட்தோடு நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரனும் தாக்கப்பட்டுள்ளார் . இந்த சம்பவம் நேற்று (17) மாலை இடம்பெற்றுள்ளது.
கடந்த 15ஆம் திகதி பொத்துவில் பகுதியில் இருந்து யாழ். நல்லூர் நோக்கிய தனது பயணத்தை தொடர்ந்த திலீபனின் நினைவு ஊர்தியானது நேற்று (17) மூதூர் – கட்டைபறிச்சான் பகுதியில் இருந்து ஆரம்பித்து ஆலங்கேணி, தம்பலகாமம் ஊடாக திருகோணமலை நோக்கி ஏ 6 பிரதான வீதியூடாக பயணித்தபோது சர்தாபுர பகுதியில் வீதியில் கற்களைப் போட்டு வழிமறித்து குறித்த வாகனம் சில பெரும்பான்மை இனத்தவர்களால் தாக்கப்பட்டுள்ளது.
இதன்போது வாகனத்தில் அமர்ந்திருந்த தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வராஜா கஜேந்திரனும் வாகனத்தில் இருந்து இறக்கப்பட்டு தாக்கப்பட்டுள்ளார்.
இதன் பின்னர் திலீபனின் நினைவு ஊர்தி திருகோணமலை நகருக்குள் உள்நுழைய விடாது திருப்பி அனுப்பப்பட்டது.