23 Jun 2022
சர்வதேச நாணய நிதியத்தின் பணியாட்தொகுதியினருடன் முன்னெடுக்கப்படும் கலந்துரையாடலின் இணக்கப்பாட்டையும், உடன்படிக்கைகள் தொடர்பிலும் நாடாளுமன்றத்திற்கு தெரிவிப்பீர்களா? என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் நாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்றும் போது கேள்வி எழுப்பினார்.
சர்வதேச நாணய நிதியத்தின் பணியாட்தொகுதியினருடன் கலந்துரையாடல் நடக்கின்றது. நாங்கள் அவர்களின் இணக்கத்தை எதிர்பார்க்கின்றோம். இப்போது நாடாளுமன்றத்தை பலப்படுத்த நடவடிக்கைகளை எடுக்கும் இந்த நேரத்தில் நீங்கள் குறித்த பிரதிநிதிகளுடனான உடன்படிக்கைகள் தொடர்பில் நாடாளுமன்றத்திற்கு தெரிவிப்பீர்களா?
அத்துடன் இந்த எரிபொருள் நெருக்கடிகள் தொடர்பில் ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளன. இந்நிலையில் தனியார் தரப்பினருக்கு இறக்குமதி செய்வதற்கு அனுமதி வழங்கினால் அதன் சாத்தியம் தொடர்பில் அரசாங்கம் பரிசீலிக்குமா?
இதேவேளை, அமெரிக்காவில் வங்கியொன்று இலங்கைக்கு எதிராக வழக்கு தொடர்ந்துள்ளது. அவர்களுக்கான கொடுப்பனவுகளை செலுத்தாமை தொடர்பிலேயே அந்த வழக்குத் தொடரப்பட்டுள்ளது. இந்நிலையில் அரசாங்கம் என்ன செய்யப் போகின்றது? இதனை எதிர்கொள்ள முன்னெடுக்கும் நடவடிக்கை என்ன? என அவர் தொடர்ந்து கேள்வி எழுப்பினார்.