26 Mar 2021
தமிழரின் மருத்துவ குறிப்புக்களில் ஒரு அளப்பரிய மூலிகைதான் கொத்தமல்லி. இந்த கொத்தமல்லியை தினமும் உணவுடன் சேர்ப்பவர்களுக்கு ஒரு குறையும் இல்லை என்கின்றன சமீபத்திய ஆய்வுகள்.
இந்த கொத்தமல்லியால் உண்டாகக்கூடிய நன்மைகள் குறித்து இங்கு பார்க்கலாம்.
கணினிகளில் வேலை செய்வோருக்கு கண்கள் எளிதில் பாதிப்படையும். அதேபோல் தொடர்ந்து கைபேசியை நோண்டுவோருக்கு கண்கள் பாதிப்படையும் அபாயம் இருக்கிறது. இதற்கு கொத்தமல்லி விதையை நீரில் கொதிக்க வைத்து ஆறியபின் அந்த நீரில் கண்களை கழுவி வந்தால் கண்கள் புத்துணர்வு பெறும்.
இதய நோய்கள் ஏற்படாமல் இருக்க அடிக்கடி உணவில் கொத்தமல்லி விதைகளை சேர்த்துக்கொள்ள வேண்டும். சிலருக்கு அடிக்கடி புளித்த ஏப்பம் ஏற்படும். இந்த புளித்த ஏப்பத்தை போக்க தனியாவுடன் சிறிது சோம்பு சேர்த்து சாப்பிட்டால் குணமடையும்.
கொத்தமல்லி விதை பொடியை தொடர்ந்து உபயோகப்படுத்தும் போது எளிதில் ஜீரணமாகாத உணவுகளை சாப்பிட்டாலும் ஜீரணமடைய செய்யும். தடுமல் ஏற்பட்டாலே தலைவலி ஏற்படும். இவர்கள் கொத்தமல்லி விதையை அரைத்து நெற்றியில் ஒத்தல் போட்டால் தலைவலி, மூக்கடைப்பு குணமாகும்.
மேலும் பித்தத் தலைவலி உள்ளவர்கள் சந்தனத்துடன் கொத்தமல்லியை அரைத்து ஒத்தடம் கொடுத்தால் பித்தம் தணிந்து தலைவலி குணமாகும்.
தோலில் வெடிப்புகள் சரியாக, தனியா கஷாயம் செய்து அருந்தவும். ஒரு தேக்கரண்டி விதைகளை கொதிக்கச் செய்து, விழுதாக்கி அதன் மீது தடவவும்.
கொத்தமல்லி விதையை வாயில் வைத்து மென்று உமிழ்நீரை இறக்கினால் சில நேரங்களில் பல் இடுக்குகளில் உள்ள கிருமிகளாலும், குடல் அல்லது வயிற்றுப் புண்களாலும் வர கூடிய வாய் துர்நாற்றம் நீங்கும்.
மாதவிடாய் சமயத்தில் அதிக அளவு இரத்தப் போக்கை கட்டுப்படுத்த தனியா விதைகளை கஷாயம் செய்து பாலுடன் அருந்தினால் நல்ல பயன்கிடைக்கும்.