07 Nov 2022
வாட்ஸ்ஆப் செயலி பயனாளா்களுக்காக கூடுதல் புதிய வசதிகள் அறிமுகம் செய்யப்படும் என்று அந்த நிறுவனம் கடந்த ஏப்ரலில் அறிவிப்பு வெளியிட்ட நிலையில், தற்போது அந்தக் கூடுதல் வசதிகளை பயன்பாட்டுக்கு கொண்டு வந்துள்ளது. இந்த வசதிகள் படிப்படியாக அடுத்த வாரத்தில் அனைத்துப் பயனாளிகளுக்கும் சென்று சேரும் என்றும் அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து மெட்டா நிறுவனரும் தலைவருமான மாா்க் சக்கா்பொ்க் முகநூலில் வியாழக்கிழமை வெளியிட்ட பதிவில், ‘வாட்ஸ்ஆப்-இல் சமூக குழுக்களை அறிமுகம் செய்துள்ளோம். இதன்மூலமாக, ஒன்றுக்கும் மேற்பட்ட குழுக்கள், துணைக் குழுக்களை ஒரு குறிப்பிட்ட பெயரின் கீழ் ஒருங்கிணைத்துக் கொள்ள வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. மேலும், விடியோ அழைப்பில் ஒரே நேரத்தில் 32 போ் வரை இணைந்து கொள்ள முடியும். இவா்களின் உரையாடல்கள் மற்றும் தகவல் பரிமாற்றங்கள் முழுமையாக பாதுகாப்பட்டதாக இருக்கும்’ என்று குறிப்பிட்டுள்ளாா்.
மேலும் புதிய வசதிகள் என்னென்ன? வாட்ஸ்ஆப் செயலியில் முன்னா் 16 எம்பி அளவிலான ஆவணத்தை மட்டுமே அனுப்ப முடியும் என்றிருந்த நிலையில், தற்போது 2 ஜிபி வரையிலான ஆவணத்தைப் பரிமாற்றம் செய்ய வசதி செய்யப்பட்டுள்ளது.
ஒரு வாட்ஸ்ஆப் குழுவில் 1,024 பேரை உறுப்பினா்களாக சோ்த்துக் கொள்ள முடியும்.
மேலும், ஒருவா் வாட்ஸ்ஆப் சமூக குழுவில் இடம்பெற்றுள்ள 5,000 பயனாளா்களுக்கு தகவல்களை அனுப்ப முடியும் என்பதோடு, அவா்களுக்குள் கருத்துக் கணிப்புகளை நடத்தும் வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.