19 Mar 2023
இங்கிலாந்து கடற்படையின் போர்க்கப்பலான 'எச்.எம்.எஸ்.டமர்' நேற்று முன்தினம் சென்னை வந்துள்ளது. வருகிற 29-ந்தேதி வரை இந்த கப்பல் சென்னையில் நடுக்கடலில் நிறுத்தப்பட்டு இருக்கும். சமீபத்தில் பலதரப்பு கடற்படை பயிற்சியான ''லா பெரோஸ்''-ல் இந்த கப்பல் பங்கேற்றது. கப்பலின் கமாண்டர் டெய்லோ எலியட் சுமித், டெல்லியில் உள்ள இங்கிலாந்து தூதரகத்தின் கடற்படை ஆலோசகர் கேப்டன் இயன்லின் ஆகியோர், சென்னையில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி கடற்படை பகுதியின் கட்டுப்பாட்டு அதிகாரி அட்மிரல் எஸ்.வெங்கட்ராமனை சந்தித்து பரஸ்பர நலன் சார்ந்த விஷயங்கள் குறித்து விவாதித்தனர். இந்த கப்பல் சென்னையில் தங்கியிருக்கும் காலத்தில், இரு கடற்படைகளுக்கும் இடையே தொழில்முறை மற்றும் சமூக கலந்துரையாடல்கள், விளையாட்டு போட்டிகள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளன.