22 Jun 2022
இந்திய கடன் வசதியின் கீழ் ஓமானில் இருந்து இலங்கைக்கு கொண்டுவரப்படவுள்ள யூரியா உரத்தை அடுத்த மாதம் 15ஆம் திகதி முதல் விவசாயிகளுக்கு விநியோகிக்க திட்டமிட்டுள்ளதாக விவசாயத்துறை அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் கருத்து வெளியிட்ட அவர், நெல் சந்தைப்படுத்தல் சபையின் ஊடாக அரிசியை உற்பத்தி செய்து குறைந்த விலைக்கு அதனை விற்பனை செய்வதற்கான வேலை திட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதாகவும் குறிப்பிட்டார்.
இந்த ஊடக சந்திப்பில் கருத்து வெளியிட்ட அமைச்சரவை பேச்சாளரான அமைச்சர் பந்துல குணவர்தன விவசாய உற்பத்திகளை ரயில்கள் மூலம் கொழும்பிற்கு கொண்டு வருவதற்கு அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாக கூறினார்.
அதேநேரம், ரயில்வே திணைக்களத்திற்கு சொந்தமான 16 ஆயிரம் ஏக்கர் பரப்பிலான காணியை பயிர்ச்செய்கை நடவடிக்கைகளுக்காக தற்காலிகமாக பயன்படுத்தும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதன்படி ஒன்பது மாகாணங்களையும் உள்ளீர்க்கும் வகையில் குறித்த இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.